Monday, October 20, 2008

பசியால் 6 விநாடிக்கு ஒரு குழந்தை பலி


நியூயோர்க்: பசியால் 6 விநாடிக்கு ஒரு குழந்தை பலியாவதாக ஐ.நா.செயலாளர்நாயகம் பான் கீ.மூன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


உலக உணவு தினத்தையொட்டி நியூயோர்க்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உணவுப் பற்றாக்குறையை போக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச பொருளாதார நெருக்கடி, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற பாகுபாடின்றி உலக நாடுகள் அனைத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் உணவுப் பற்றாக்குறை பிரச்சினையும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் இரவில் உணவின்றி தூங்கச் செல்வதை பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.

தற்போது எரிபொருள் மற்றும் உணவுப் பொருள் விலை உயர்வால் மேலும் 10 கோடி பேர் பசிப்பள்ளத்தாக்கில் தள்ளப்படும் அபாயம் உருவாகி உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் பசியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மனித வாழ்வின் உயிர் ஆதார பிரச்சினை. ஐ.நா.சபையின் இந்த முயற்சிக்கு உலக நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டத்தின் செயல் இயக்குநர் ஜோசட்டி பேசும்போது, எரிபொருள் விலை உயர்வு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 100 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்கச் செய்வது சர்வதேச சமுதாயத்தின் கடமை. நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பசியில் வாடுவதை நிறுத்த வேண்டும். இதற்காக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.

ஐ.நா.சபை சார்பில் அக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1945 ஆம் ஆண்டு ஐ.நா.சபையில் உணவு மற்றும் விவசாயக் கழகம் தொடங்கப்பட்டது முதல் உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

No comments: