Tuesday, October 28, 2008


ஜாதிவாரியாக கணக்கெடுப்பு-உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2008

சென்னை: சமூக நீதி குறிக்கோளை அடைவதற்கு வசதியாக ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக சமூக நீதியின் அடிப்படை அவசியத்தை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. 1931ம் ஆண்டிற்கு பின்னர் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக நடத்தப்படவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் உண்மை.

இந் நிலையில் 1931ம் ஆண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு விழுக்காட்டை மீண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும், இது சமூக நீதி குறிக்கோளை அடைவதற்கு தேவையென்றும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இது காலத்தின் தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது, முதலில் அச்சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.அப்போது 1931ம் ஆண்டுக்கு பின்னர் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காடி எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட உயர்வை கல்வி நிலையங்களில் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கு அரசு வந்தது எப்படி என்ற வினாவை உச்சநீதிமன்றம் எழுப்பியது.

அந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் பாமக சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் மக்கள் தொகை கணக்கெடுப்பை இனி ஜாதிவாரியாக நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இது தொடர்பாக எத்தகைய அறிவுறுத்தலையும், ஆணையையும் பிறப்பிக்கவில்லை.

பொதுவாக, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான வழக்குகளில் மனுதாரர்கள் கேட்காத கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் பல்வேறு நீதிமன்றங்கள் விதித்து வந்திருக்கின்றன.மண்டல் கமிஷன் வழக்கில் மனுதாரர் சார்பில் கோரப்படாத ஒரு நிபந்தனையை உச்சநீதிமன்றம் தானாகவே விதித்தது. கிரீமி லேயர் எனப்படும் அம்சத்தை நீதிமன்றம் தானாகவே வகுத்து அளித்திருக்கிறது.மேலும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என்ற உச்ச அளவும் இதே டைமுறையில்தான் நீதிமன்றத்தால் புகுத்தப்பட்டது.

இப்படி சமூக நீதிக்கு பாதிப்பான காரியங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக எந்த தீர்ப்பும் வரவில்லையே என்ற கவலையும், ஏக்கமும் சமூக நீதி ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி ஆர்வலர்களுக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.அந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரரின் பணி அமர்த்தல் தொடர்பான பிரச்சினை என்றாலும், சமூக நீதியின் அடிப்படை அவசியத்தை உணர்ந்து நீதித்துறையின் வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இருவரும் இடஒதுக்கீட்டு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக கிடைக்க ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருக்கிறது.இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இந்த அறிவுறுத்தலை மத்திய அரசின் உள்துறை உடனடியாக ஏற்றுக் கொண்டு உரிய ஆணைகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு வழங்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டிலும், சமூக நீதியிலும் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும், தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments: