Thursday, October 30, 2008

கியூபா மீதான யுஎஸ் தடை: நீக்க ஐநா (17) தீர்மானம்

வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008

ஐ.நா: கியூபா மீதான 46 ஆண்டு கால அமெரிக்க பொருளாதார தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையில் 17வது முறையாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பரம வைரிகளில் ஒன்று கியூபா. அந்த நாட்டின் மீது கடந்த 46 ஆண்டு காலமாக பொருளாதார தடையை விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால் அதையும் மீறி கியூபா மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. தொடர்ந்து தனது அமெரிக்க எதிர்ப்பில் தீவிரமாகவும் உள்ளது.இந்த நிலையில், கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை அமெரிக்கா சட்டை செய்வதில்லை.

ஐ.நா. சபையும் தொடர்ந்து தடையை நீக்க வேண்டும் என கடந்த 16 வருடமாக அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 17வது வருடமாக அமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என ஒருமித்த குரலில் ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் கடந்த 16 வருடங்களாக ஐ.நா.வின் தீர்மானத்தை கண்டுகொள்ளாமல் விட்டதைப் போல இந்த முறையும் புஷ் நிர்வாகம் இந்தத் தீர்மானத்தையும் சட்டை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 185 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா,இஸ்ரேல், பலாவு ஆகியவை எதிர்த்து வாக்களித்தன.

மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள் ஆகியவை நடுநிலை வகித்தன. கடந்த ஆண்டு 184 வாக்குகள் பெற்று இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.கியூபா மீதான தடையை நீக்க அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஓபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோர் எதி்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மெக்கெய்ன், கியூபா மீதான தடையை மேலும் இறுக்கமாக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார்.

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் ஒரு சம்பிரதாய தீர்மானமே தவிர இதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.கியூப வெளியுறவு அமைச்சர் பெலிப்பி பெரேஸ் ரோக் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசுகையில், இந்தத் தடை நியாயமற்றது, சட்ட விரோதமானது என்றார்.

No comments: