மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்பு : ராணுவ அதிகாரி ஒப்புதல்
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 13:35 IST )
மாலேகாவ் குண்டுவெடிப்பில் தமக்கு தொடர்புள்ளதை கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் ஒப்புக் கொண்டுள்ளதாக மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று மாலேகாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கான சதித் திட்ட வரைவை தாம்தான் தயாரித்துக் கொடுத்ததோடு,அதற்கு தேவையான வெடி மருந்துகள் உள்ளிட்டவைகளையும் அளித்ததாகவும் விசாரணையில் புரோகித் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலேகாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரகியா தாகூர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான ரமேஷ் உபாத்தியா மற்றும் ஷரத் குல்கர்னி ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு ராணுவத்தில் தற்போது பணிபுரியும் ஸ்ரீகாந்த் புரோகித்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து புரோகித்தை கடந்த 5 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில்,விசாரணையில் குண்டுவெடிப்பில் தமக்குள்ள தொடர்பை புரோகித் ஒப்புக் கொண்டுள்ளார்.
மலேகான்: முழுப் பரிணாமத்தையும் கண்டுபிடிப்போம்- மத்திய அரசு!
மலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கில் பணியில் உள்ள ராணுவ அதிகாரிக்குத் தொடர்புள்ளது குறித்துக் கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தச் சம்பவத்தின் முழு பரிமாணத்தையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இவ்வழக்கில், லெப்டினன்ட் கலோனலுக்கு எதிராக மராட்டியக் காவல் துறையினரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
இதுகுறித்துப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தச் சம்பவம் (குண்டு வெடிப்புகளில் ராணுவ அதிகாரிக்குத் தொடர்பிருப்பது) நம் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தரக்கூடியதாகும். குண்டு வெடிப்புகளின் முழுப் பரிமாணத்தையும் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மராட்டியக் காவல்துறையினரின் விசாரணை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் அடிப்படையில் லெப்டினன்ட் கலோனல் மீது பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோல, சந்தேகத்திற்குரிய அதிகாரிகளின் மீது விசாரணை நடத்த, எந்தவிதத் தயக்கமும் இன்றி முழு ஒத்துழைப்பைத் தர ராணுவமும் பாதுகாப்பு அமைச்சகமும் தயாராக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment