Sunday, September 7, 2008

அணுகுண்டு சோதனை நடத்த மாட்டோம்-இந்தியா

டெல்லி: அணு உலைகளுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் என்.எஸ்.ஜி (Nuclear supply group) நாடுகளிடம் இருந்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்ற இந்தியா கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளது.அணு ஆயுத பரவல் தடை சட்டம், அணு குண்டு சோதனை தடை சட்டம் ஆகிய சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு எப்படி அணு உலைகளுக்கான எரிபொருளைத் தர முடியும் என பல என்எஸ்ஜி உறுப்பு நாடுகளும் கேள்வி எழுப்பியுள்ளதால் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தமே கேள்விக்குறியாக உள்ளது.இந்தியாவுக்கு அணு எரிபொருளை தந்தால் அதை ராணுவ தேவைக்கு (அணு குண்டுகள் தயாரிக்க) பயன்படுத்தி விடும் என்று நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அச்சம் தெரிவித்து எதிர்த்து வருகின்றன.இதையடுத்து இந்த என்எஸ்ஜி நாடுகளை சமாதானப்படுத்தும் வகையில் இந்தியா மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,இந்தியா எப்போதுமே அணு ஆயுத பரவலுக்கு காரணமாக இருந்ததில்லை. மிகப் பொறுப்போடு நடந்து வரும் தேசம் இந்தியா. இனிமேல் அணு ஆயுத சோதனை நடத்துவதில்லை என்ற சுய கட்டுப்பாட்டையும் விதிக்குக் கொண்டுள்ளது. அந்த சுய கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் மீற மாட்டோம்.அணு தொழில்நுட்பத்தையோ, கருவிகளையோ, எரிபொருளையோ எந்த வகையிலும் மற்ற நாடுகளுக்கு இந்தியா தந்ததில்லை, தரவும் தராது.அணு ஆயுத பரவலைத் தடுக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் மிகத் தீவிரமாக செயல்படும்.அணு ஆயுத போட்டி உள்பட, எந்த ஆயுத போட்டியிலும் ஈடுபட மாட்டோம். போரின்போது நாங்களாக முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆபத்தான தொழில் நுட்பங்கள் பரவுவதற்கு இந்தியா எந்த வகையிலும் காரணமாக இருக்காது. அணு உலைகளுக்குத் தரப்படு்ம் எரிபொருளை (யுரேனியம், புளுட்டோனியம்) செறிவூட்டும் வேலைகளை (அணு குண்டு தயாரி்க்க வசதியாக சுத்தப்படுத்துவது) செய்ய மாட்டோம்.எங்களின் மின்சார தேவைக்கு அணு எரிபொருளை வினியோகம் செய்தால், அணு ஆயுத பரவல் தடை முயற்சி வலுப்பெறும். இந்த ஒத்துழைப்பு, இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் நல்லது.மேலும் இந்தியாவே, எரிபொருள் வினியோக நாடாக உருவெடுக்க விரும்புகிறது. குறிப்பாக, தோரியத்தில் இருந்து பெறப்படும் எரிபொருளை வினியோகிக்க விரும்புகிறோம். சர்வதேச எரிபொருள் வங்கிகளை தொடங்கினால் அவை இந்தியாவுக்கும் பயன் அளிக்கும்.உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல், சீதோஷ்ண நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிக்கும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரணாப்.இந்த அறிக்கை வெளியானவுடன் அதை ஆஸ்திரியா, அயர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளிடம் வழங்கி அவர்களை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கினார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன்.

No comments: